வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (16:00 IST)

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 32 பேரை விடுவித்த தீர்ப்பின் 5 முக்கிய அம்சங்கள்

பாபர் மசூதி 1992இல் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்துள்ளது லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

அயோத்தியில் உள்ள டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ராமஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்பட்டிருந்தது.

விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) பாரதிய ஜனதா கட்சி, சிவசேனை உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய பேரணிக்காக அங்கு பல ஆயிரம் முதல் சில லட்சம் பேர் வரை கூறியிருந்தனர்.

அங்கு கூடியிருத்தவர்களை தூண்டிவிட்டு மசூதியை இடிக்கச் சதி செய்தது, சமூகக் குழுக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்ததுதான் இன்று இந்துத்துவ தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச காவல்துறை பதிவு செய்த பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக்கி, ஒரே வழக்காக 1993 முதல் சிபிஐ விசாரித்து வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் தற்போது 32 பேர் உயிருடன் உள்ளனர்.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் யாதவ் தனது தீர்ப்பில் கூறியுள்ள ஐந்து முக்கிய புள்ளிகளை தொகுத்து வழங்குகிறோம்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரை விடுவிக்க நீதிமன்றம் தெரிவித்த காரணங்கள் இவை.
  • டிசம்பர் 6, 1992 பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படவில்லை.
  • மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் வலுவானவையாக இல்லை. குற்றங்களை நிரூபிக்க அவை போதுமானதல்ல.
  • மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிகழ்த்திய உரை என்று சிபிஐ ஆதாரமாக வழங்கியுள்ள ஒலிப்பதிவு தெளிவானதாக இல்லை.
  • சமூக விரோத சக்திகள் பாபர் மசூதியை இடிக்க முற்பட்டபோது, குற்றம்சாட்டவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்று தெரிகிறது.
  • நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரமாக வழங்கிய காணொளி, படங்கள் , ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்படவில்லை. புகைப்படங்களின் 'நெகட்டிவ்' நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சேதமாகியிருந்தன.