1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (19:49 IST)

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல்:“இது விசாரணை நீதிமன்றம் அல்ல” - உச்ச நீதிமன்றம்

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தின் போது போலீசால் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, "இதுவொன்றும் விசாரணை நீதிமன்றம் அல்ல," என்று கூறினார்.

அவர், "ஏன் உச்சநீதிமன்றத்தை விசாரணை நீதிமன்றமாக மாற்றுகிறீர்கள்? உயர்நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள். இந்த போராட்டமானது வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு சூழ்நிலையில் நடைபெற்றது. அதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்," என்றார்.

மாணவர்கள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மெகபூப், "போராடும் உரிமையைக் காக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை" என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, "நாங்கள் தலையிட தேவையில்லை. இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை." என்றார்.

மெகபூப், "மாணவர்களின் போராட்டத்துக்கு மதசாயம் பூச பார்க்கிறது அரசு" என்றார்.

"பேருந்துகள் எப்படி எரிக்கப்பட்டது? உங்களுக்கு இது குறித்துத் தெரியாதது குறித்து வியப்பாக உள்ளது" என்றார் உச்ச நீதிமன்ற நீதிபதி.

மாணவர்களின் போராட்டத்தைத் தவறாக அரசு சித்தரிக்கப்பார்க்கிறது என்று வாதிட்டார் மெகபூப்.

அரசைக் காப்பது எங்கள் வேலையில்லை என்று கூறிய நீதிபதி, "இந்த போராட்டம் பல மாநிலங்களில் நடந்துள்ளது. மாநில உயர் நீதிமன்றங்கள் இதை விசாரிப்பதுதான் சரி." என்றார்.