1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (21:45 IST)

பாலியல் குற்றம் சாட்டிய மாணவி கைது: பாஜகவின் சுவாமி சின்மயானந்த் வழக்கில் திருப்பம்

தன்னை பாலியல் வல்லுறவு செய்ததோடு, பாலியல் தாக்குதலும் தொடுத்தாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது புகார் அளித்து, அவர் கைதாக காரணமாக இருந்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆபாசக் காணொளிகளை வெளியிடாமல் இருக்க, இந்த மாணவி அவரது நண்பர்களோடு இணைந்து ரூ. 5 கோடி ரூபாய் தர வேண்டுமென சுவாமி சின்மயானந்துக்கு மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
உத்தர பிரதேசத்தில்சின்மயானந்த் நடத்தி வந்த சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி, அவர் மீது பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
புதன்கிழமை காலை உள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த மாணவி, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று இந்த வழக்கை புலனாய்வு மேற்கொண்டு வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் நவீன் அரோரா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், நீதிபதிக்கு முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மாணவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று நவீன் அரோரா கூறியுள்ளார்.
 
மாணவியின் விண்ணப்பத்தை ஏற்காத உயர் நீதிமன்றம்
 
தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கோரி இந்த மாணவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியது.
 
செய்வாய்க்கிழமை இந்த முன்ஜாமின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிமன்றம், அது பற்றி, 26ம் தேதி, வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.
 
ஆனால், நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த மாணவியை இன்று கைது செய்துள்ளது.
 
 
சின்மயானந்தாவை இந்த சிறப்பு புலனாய்வு குழு ஏற்கெனவே கைது செய்துள்ளது. அவர் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
தனது அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி இந்த சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக 376(C) பிரிவின் கீழ் சின்மயானந்த் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
 
உள்ளூர் அரசு நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று இந்த மாணவியும், அவரது குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்கத்கது.
 
யார் இந்த சின்மயானந்த்?
 
சுவாமி சின்மயானந்த் உத்தரப் பிரதேசத பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னால் மத்திய அமைச்சரும் ஆவார்.
 
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் உள்துறை இணை அமைச்சராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அயோத்தி ராமர் கோயில் கட்டவதற்கு பரப்புரை மேற்கொண்ட முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
 
உத்தரப் பிரதேசத்தின் ஷாஷாப்பூரில் இவரது ஆசிரமம் உள்ளது. பல கல்வி நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.