வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (23:43 IST)

24 ஆயிரம் ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்

சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
 
ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர்.
 
கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது.
 
இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் உயிர் வாழ முடியும் என கூறப்பட்டிருந்தது.
 
'கரன்ட் பயாலஜி' என்கிற அறிவியல் சஞ்சிகையில் திங்கட்கிழமை வெளியான புதிய ஆராய்ச்சியில், இந்த உயிரினம் உறைபனியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை உயிர் வாழும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
"ஒரு பல செல் உயிரினம் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கப்படலாம், பிறகு மீண்டும் உயிர் பெறும் என்பதை தான் நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் செய்தி" என ரஷ்யாவில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசியோகெமிக்கல் அண்ட் பயாலஜிகல் ப்ராப்ளம்ஸ் இன் சாயில் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டாஸ் மலவின் என்பவர் பத்திரிகை சங்கத்திடம் கூறினார்.
 
இந்த உயிரினம் எப்படி இந்த நிலையை அடைந்தது என்பதை தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பல உயிரினங்களை உறைய வைத்து, பிறகு பனியை உருகச் செய்து சோதனை மேற்கொண்டனர்.
 
டெலாய்டு ரோட்டிஃபர் எந்த காலத்தைச் சேர்ந்தது என சோதனைக்கு உட்படுத்திப் பார்த்த போது 23,960 முதல் 24,485 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்தது.
 
டெலாய்டு ரோட்டிஃபர்கள் உலகம் முழுக்க உள்ள நன்னீர் சூழலில் காணப்படும் ஒரு வகையான ரோட்டிஃபர் உயிரினம்.
 
செயற்கைச் சூரியனும் கிரகணம் பற்றிய அச்சமும் - அறிவியல் உண்மைகளும் என்ன?
அமேசான் காடுகளை சேதப்படுத்தாமல் 5,000 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள்
இந்த உயிரினம் எந்தவித கடினமான சூழலையும் தாங்கக் கூடிய வல்லமை பெற்றது. உலகிலேயே கதிரியக்க எதிர்ப்புத் திறன் மிகுந்த உயிரினங்களில் இதுவும் ஒன்று என 'தி நியூ யார்க் டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. குறைந்த அளவிலான ஆக்சிஜன், உணவின்றி வாழும் பட்டினி நிலை, அதீத அமிலத் தன்மை, பல ஆண்டுகளாக நீரின்றி வாழ்வது போன்ற மிகச் சவாலான சூழல்களையும் இந்த உயிரினம் எதிர்கொள்ளக் கூடியது என அச்செய்தியில் கூறபட்டு இருக்கிறது.
 
இதேபோல வேறு சில பலசெல் உயிரினங்களும் பல்லாயிரம் ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்துவிட்டு, மீண்டும் உயிர்பெற்று திரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் நெமடோட் புழு, சில செடிகள் மற்றும் சில பாசிகள் அடங்கும்.