1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (09:37 IST)

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் இரண்டாம் பாகம் தற்போது ‘எம்புரான்’ என்ற பெயரில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவும் திரையரங்குக்குள் சென்று நாம் படம் பார்க்க ஆரம்பிக்கும் வரைதான்.

அதீதமான ஸ்லோ மோஷன் பில்டப் ஷாட்கள்(படத்தில் ஒரு சீனில் வருபவருக்குக் கூட ஸ்லோமோஷனில் ஒரு பில்டப்), திரைக்கதையில் சுவாரஸ்யமோ எதிர்பார்ப்பைத் தூண்டும் காட்சிகள் இல்லாதது, வன்முறை அருவருப்பான முறையில் படமாக்கியது, கதாநாயகனான மோகன்லால் புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாமல் படம் முழுவதும் ஸ்லோ மோஷனில் நடந்து வருவது என ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்துள்ளது எம்புரான். கேஜிஎஃப் போன்ற படங்களைப் பார்த்து அதைப் போல ஒரு மாஸ் பில்டப் படம் எடுக்க ஆசைப்பட்டு சூடுபோட்டக் கதையாக ஆகிவிட்டது எம்புரான்.