ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..
ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, தினமும் சுவாமி-அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் 8ஆம் நாளான நேற்று காலை நடராஜர் கேடயத்தில் புறப்பாடு கண்டார். மாலை, தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று சிவராத்திரியையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், ஸ்படிக லிங்க பூஜையும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தேரை இழுத்தனர். இரவு, மின் அலங்காரத்துடன் வெள்ளி ரதத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
நாளை காலை, இந்திர விமானத்தில் வீதி உலா, மாலை தங்க ரிஷப வாகன சேவை நடைபெறும். 28ம் தேதி பிச்சாடனர் சேவை, 1ம் தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Edited by Mahendran