1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vivek jayaraman answer on nri qoata scam

தவறு இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள் - விவேக் ஜெயராமன்

Vivek jayaraman
உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்பே சட்டப்படிப்பை படித்ததாக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகனும், ஜெயா தொலைக்காட்சி மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

 
அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் எல்எல்பி ஹானர்ஸ் பட்டப்படிப்புக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின்(என்.ஆர்.ஐ) கீழ் முறைகேடாக ஆவணங்கள் இன்றி ஜெயா டிவியின் சிஇஓ, ஜாஸ் சினிமாஸின் சிஇஒ விவேக் ஜெயராமன் சீட் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 
 
2015ம் ஆண்டு மூன்றாண்டு எல்.எல்பி ஹானர்ஸ் படிப்பில் வெளி நாட்டு இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்திய தூதரகத்தின் சான்றிதழ், வங்கி கணக்கு, உறுதி சான்றிதழ், தகுதி சான்றிதழ் என அதற்கான ஆதாரங்கள் எதுவுமே அவரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள விவேக் ஜெயராமன் “ இந்த குற்றச்சாட்டு தவறானது. சிங்கப்பூர் குடியுரைமை பெற்ற என் சகோதரி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் படித்தேன்.  அதற்கான முறையான சான்றிதழ்களை சமர்பித்தேன். அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.  உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறி இருந்தால் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.  படிப்பில் சேர்ந்த சில நாட்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக நான் படிப்பிலிருந்து விலகினேன். நான் முறைகேடாக கல்லூரியில் சேர்ந்ததாக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவது நியாயமற்றது” என அவர் கூறியுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவரசியின் மகன்தான் விவேக் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
வாரியமா? குழுவா? விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு