வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (11:51 IST)

கோரிக்கைகளை அரசு ஏற்காததால் நாளை வேலைநிறுத்தம்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

31 அம்ச கோரிக்கைகளை ஏற்காததால் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு குழு அறிவித்துள்ளது.

 தமிழக அரசு இதுவரை எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாகவும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து செப்டம்பர் 6ஆம் தேதி தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், ‘ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருந்ததாகவும் அவற்றில் 9 கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இரண்டு நீதிமன்ற வழக்குகள் காரணமாக நிலுவையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு எங்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பதால் செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் அதேபோல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும் என்றும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குழு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran