வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:38 IST)

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன்.! நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு.!!

அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சபாநாயகர் அப்பாவுக்கு, எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா முயன்றபோது, அதற்கு ஒபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது. அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலாவால் முதலமைச்சராக பதவி ஏற்றார்.  இதனால் அப்போதைய அதிமுக ஆட்சியும் தப்பித்தது.

இந்த சம்பவங்களின் போது 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஸ்டாலின்தான் வேண்டாம் என கூறிவிட்டார் எனவும் அப்பாவு தெரிவித்திருந்தார். உண்மைக்கு மாறான அவதூறு செய்தி பரப்பியதாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக வழக்கறிஞர் அணியின் இணை செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். 

 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல், செப்டம்பர் 9ஆம் தேதி, நேரில் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.