செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:37 IST)

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் யூகேஜி படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் கழிப்பறை சென்றபோது பின் தொடர்ந்து சென்ற பள்ளி ஊழியர் அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் துப்புரவு பணியாளர் அக்‌சய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அக்‌சய் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை அடுத்து சிறையில் இருந்து அக்‌சய் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது தப்பிக்க முயன்றதாகவும், காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து காவலர்களை சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தப்பி ஓட முயற்சி செய்த அக்‌சய் என்பவரை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்ட அக்‌சய் உயிரிழந்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva