1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:27 IST)

மதுரை எய்ம்ஸ்-க்கு ஒதுக்கிய நிதி இவ்வளவுதானா? – RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை மூலமாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் பல்நோக்கு நவீன மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் மதுரையில் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இதற்காக கல் நடப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது தொடர் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே காலத்தில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு கிடைத்த பதிலில் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ரூ.12.32 கோடி மட்டுமே ஒதுகப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிக்கான மொத்த மதிப்பு ரூ.1977.8 கோடி என்றும், இந்த கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டுதான் நிறைவு பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இந்த ஆண்டிலேயே முடிக்கப்படுகின்றன. தெலுங்கானா பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2024ம் ஆண்டிலும், காஷ்மீரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2025லும் முடிவடைய உள்ளன. கடைசியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது.

Edit by Prasanth.K