1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (09:40 IST)

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு! – நீதிமன்றம் சொல்லும் காரணம் என்ன?

சென்னையில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வது குறித்த வழக்கில் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.



பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் அவர் வீட்டருகே மர்ம நபர்கள் 6 பேரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

இன்று சென்னையில் நடைபெற உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கலந்துக் கொள்ள உள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் புதைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் “அடக்கம் செய்யும் பகுதியில் மணிமண்டபம் போன்றவை கட்ட வேண்டுமானால் பெரிய இடம் தேவைப்படுமே? இடப்பற்றாக்குறை ஏற்படுமே? எப்படி சமாளிப்பீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் “ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரும் இழப்பாக இருந்தாலும், அதற்காக சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வுகளின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் எப்படி கட்டுப்படுத்த முடியும்? ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்கள் அல்லவா?

போதுமான இடவசதி இல்லாமல் அங்கு புதைக்க அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை, தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு பின்னர் வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்” என கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K