வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:31 IST)

முதல்வருக்கு பதவிப் பயம் வந்துவிட்டதா ? – சிபிஎம் கட்சி விமர்சனம் !

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி பறிபோய் விடும் என்ற பயம் வந்துவிட்டதோ என சந்தேகம் எழுந்துள்ளது என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். இதனால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர் செல்வமா அல்லது முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. முதல்வர்கள் வெளிநாடுகளுக்கு இதுபோல் செல்லும்போது பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம்.ஆனால் இம்முறை அந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாது எனவும் வெளிநாடுகளில் இருந்த படியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பார் என்றும் முக்கியமானக் கோப்புகள் அனைத்தும் பேக்ஸ் மூலம் அவரிடம் கையெழுத்து வாங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த முடிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிபிஎம் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘ பொதுவாக ஒரு முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்துச் செல்வதுதான் வழக்கம். வெளிநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது தனது பதவி பறிபோகுமா என்று பயப்படுகிறாரா என்று தெரியவில்லை. மத்திய அரசின் மேல் உள்ள அவநம்பிக்கையில்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.