புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (09:08 IST)

நெருங்கும் தீபாவளி; சூடுபிடிக்காத ஜவுளி வியாபாரம்! - காத்து வாங்கும் ஈரோடு ஜவுளிச் சந்தை!

Erode Textile Market

இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில் துணி வியாபாரம் இன்னும் கலகலப்பாக தொடங்காததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

 

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகவே துணிகள், பட்டாசு விற்பனை களைக்கட்ட தொடங்கிவிடும்.

 

தமிழகத்தில் ஆடைகள் உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் திருப்பூர், ஈரோட்டில் ஆடைகள் மொத்த விற்பனையும் அதிகரிக்கும். பல வெளி மாவட்ட சிறு வியாபாரிகள் ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்தமாக துணிகளை வாங்கி சென்று உள்ளூர்களில் கடை போட்டு விற்பதும் உண்டு. இதனால் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே ஜவுளி வியாபாரம் களைக்கட்ட தொடங்கிவிடும்.
 

 

ஆனால் தீபாவளிக்கு நெருங்கி 3 வாரங்களே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளிச் சந்தை கூட்டமின்றி காணப்படுவதாக ஜவுளி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்திற்குள் 80 சதவீத வியாபாரம் நடந்த நிலையில் இந்த ஆண்டில் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபமாக ஆன்லைனில் மிகக்குறைந்த விலையில் ஆடைகள் விற்கும் சில செயலிகள் மக்களிடையே பிரபலமாக உள்ள நிலையில் பலரும் அதில் ஆர்டர் செய்வதால் உள்ளூர் துணி வியாபாரத்திலேயே சுணக்கம் கண்டு வருவதால் வியாபாரிகள் புதிய சரக்குகளை வாங்குவதில் தாமதம் செய்வதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்க துணி வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K