ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : சனி, 12 அக்டோபர் 2024 (16:29 IST)

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு.....

மதுரையில் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப்பெருமாள் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
 
விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர் .
 
நவராத்திரி உற்சவ விழா கடந்த 3ம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் மதுரை கோவில்களில் நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
 
மேலும், நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில்களிலும் வீடுகளிலும், கொலு கண்காட்சி வைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தபட்டதுடன், கோயில்களில் ஒவ்வொரு நாளும், ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் நவராத்திரி உற்சவத்தின் முக்கிய தினமான சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மதுரை வீணை இசை கலைஞர்கள் சார்பில் 108 வீணை இசை வழிபாடு மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் அமையப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப்பெருமாள் திருக்கோயிலில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
உலக அமைதி வேண்டியும், வீணை இசை கலை வளர வேண்டியும், நடைபெற்ற 22-ம் ஆண்டு 108 வீணை இசை வழிபாட்டு நிகழ்வில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று திருவிளக்கேற்றி வீணை இசை வழிபாட்டினை துவக்கி வைத்தார்.
 
வீணை இசை வழிபாட்டு நிகழ்வில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த ஏராளமான வீணை இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதி தேவிக்கு வழிபாடு நடத்தினர்.
 
வீணை இசை வழிபாட்டில் வீணை இசை பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவியர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.