இளவரசன் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை - கருணாநிதி
FILE
இது குறித்து கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறே அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இழந்தவர்களுக்கு அரசின் சார்பில் ஓரளவு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இவ்வளவிற்கும் பிறகு அங்கே அமைதி ஏற்படவில்லை. திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்டமாக திருமணம் செய்து கொண்ட அந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் மாண்டு விட்டார். எப்படி மாண்டார் என்பதே தெரியவில்லை.
தற்கொலையா? கொலையா? என்பது பற்றி உரிய விசாரணை உயர்மட்ட அளவில் நடத்தப்பட வேண்டும். கொலை என்றால் உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இளைஞரைப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
காதலோர் தொடர்கதையே!
சாதலும் ஏற்போம்!
அணுச் சஞ்சலமும் அடையோம்!
எனும் காதலோர் தொடர்கதையே! என்று நான் எப்போதோ எழுதியது என் நினைவுக்கு வருகிறது.
காதலியின் குடும்பத்தில் தந்தை மாண்டு விட்டார். காதலர் குடும்பத்திலோ அவரே மாண்டு விட்டான். தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் இனியும் நடக்கக் கூடாது. இந்த நிகழ்ச்சியே ஒரு பாடமாக இருந்திட வேண்டும். ஜாதிவெறிக்கு சமுதாயத்தில் இனியும் இடம் இல்லை என்பதை நிலைநாட்ட பாடுபடுவோம் என்று இதயமுள்ளோர் அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற சம்பவம் இளவரசன் மறைவு தற்கொலையா? கொலையா? என்று இன்னும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படவில்லை. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று, இந்தக் கொடிய குற்றத்திற்கு யாராவது காரணமாக இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனியும் இந்தக் கொடுமை நடைபெறாமல் தடுப்பதற்கு மாநிலத்தில் உள்ள எல்லா சமுதாய மக்களும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும்.
நான் இந்த நேரத்தில் யாரையும் குற்றம்சாற்ற விரும்பவில்லை. ஆனால் நடைபெற்றிருப்பது மிகவும் வருந்தத்தக்க கொடுமையான விஷயம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
