1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (07:13 IST)

இரவிலும் தொடர்ந்த கர்நாடக சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே தீரவேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இதற்காக இரவு 12 மணி வரை கூட சட்டப்பேரவையை நடத்த தயார் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதனால் கர்நாடக சட்டப்பேரவை நேற்று இரவு நீண்ட நேரம் நடந்தது. ஆனாலும் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடக்கவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர்.
 
நேற்று இரவிலும் கர்நாடக சட்டசபையில் தொடர்ந்து நடந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததால் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடும் என அறிவித்த சபாநாயகர், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் சபாநாயகரின் இந்த உத்தரவை கர்நாடக முதல்வர் குமாரசாமி ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. ஓட்டெடுப்பை ஒத்திவைக்க குமாரசாமி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது
 
இன்று இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் அல்லது கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி விலகுவார் என கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்