1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (07:46 IST)

தொடரும் ஹோம் கிரவுண்ட் பரிதாபங்கள்… டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஐபிஎல் 17 ஆவது சீசனின் ஒன்பதாவது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் ரன்களைக் குவிக்கமுடியாமல் அடுத்தடுத்து முன்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 9 போட்டிகளில் எல்லா போட்டிகளையும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.