1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (11:08 IST)

ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிக்கவேண்டும்… காரணம் சொல்லும் ஆஸி முன்னாள் கேப்டன்!

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அவரே தொடர்ந்து கேப்டனாக நீடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “என்னை பொறுத்தவரை ரோஹித் ஒரு சிறந்த கேப்டன்தான். அவர் களத்தில் எப்போது பாஸிட்டிவ்வாகவும் தீவிரத்தன்மையோடும் இருக்கிறார். அது எனக்கு பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் கேப்டனாக அவர் ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றுவிட்டதால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டியதில்லை. ஏனென்றால் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதனால் இந்தியா எவ்வளவு சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ளது என தெரிந்து கொள்ளலாம்” என ரோஹித்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.