சேகர் ரெட்டி டைரி: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்

புதன், 22 செப்டம்பர் 2021 (15:12 IST)
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம், விவாதப் பொருளாக மாறியுள்ளது.
 
வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி, கடந்த 2011-16 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மணல் உள்பட பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் கொடிகட்டிப் பறந்தார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல்வெளியானது.
 
இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி வாங்கியதாகக் கூறப்பட்டது.
 
இதையடுத்து, சேகர்ரெட்டியின் காட்பாடி இல்லம், சென்னை அலுவலகம் உள்பட அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெட்டி பெட்டியாக 24 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இந்த விவகாரத்தில் சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய ஆறு பேர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என சி.பி.ஐ கூறியதால், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
 
இந்தச் சூழலில் சேகர் ரெட்டியின் டைரியில் இடம் பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
இந்த 12 பேர் பட்டியலில் அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்து தற்போது தி.மு.கவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டின் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள்!. வெள்ளை அறிக்கை சொல்வது இதுதான்!..

இலவச திட்டங்களால் 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவு!.. நிதியமைச்சர் தகவல்!...

தமிழ்நாட்டில் அதிகமாகும் முதியோர்களின் எண்ணிக்கை!.. நிதியமைச்சர் தகவல்!..

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன்: தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை $80-க்கு கீழ் வீழ்ச்சி அடைய வாய்ப்பு.. பெட்ரோல் விலை குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments