1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் முத்திரை...!

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க  முத்திரை.
செய்முறை:
 
கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க  வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
 
பலன்கள்:
 
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து  எளிதில்  வெளிவரலாம்.
 
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த  முத்திரை உதவும்.
 
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும். முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப்  பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.
 
நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.
 
குறிப்புகள்:
 
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
 
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால்,  கழிவுகள்  எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம்,  வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
 
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.  வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
 
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும். மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
 
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.