1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (08:53 IST)

மனநல பிரச்சினைகள் ஏற்படுவது எதனால்? – இன்று உலக மனநல தினம்!

World Mental Health Day
இன்று உலக மனநல ஆரோக்கிய தினம் (World Mental Health Day) அனுசரிக்கப்படும் நிலையில் அதன் அவசியங்கள் குறித்து காண்போம்.

தற்போதைய 21ம் நூற்றாண்டில் எந்த விதமான நோய்களையும் விட மக்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினை மனநலம் சார்ந்த பிரச்சினைகளாக உள்ளது. மனநல பிரச்சினைகளே உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முன் காரணியாக அமைகிறது.

மனிதர்களின் மனநலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் போன்றவற்றிற்கு காரணம் துர் சக்திகள் என பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் 1800களில் டாக்டர் பெஞ்சமின் ரஷ் என்பவர்தான் மனநல பிரச்சினைகளுக்கு மூளையே காரணம் என்றும், துர்சக்திகள் காரணமில்லை என்றும் நம்பினார். மனோதத்துவவியல் என்ற புதிய முறை தொடங்கவும் அவர் வழிவகுத்தார்.


முந்தைய காலம் போல உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட முக்கிய வாழ்வாதார காரணிகளை தாண்டி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளுக்கான காரணிகளை அடைவது குறித்து தற்போதைய மனிதகுலம் வெகுவாகவே சிந்தித்து வருகிறது. அதனால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் மனரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
World Mental Health Day


பலருக்கு கடன் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, பணியிடத்தில் பிரச்சினை என பல இடங்களிலும் பிரச்சினைகளை சந்திப்பதால் ஏற்படும் மனசோர்வு உடல்நல பாதிப்பையும் உண்டாக்குவதாக உள்ளது. சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர் யுவல் நோவா ஹராரி சொல்வது போல, கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள். அதற்கு அறிவியல் மருந்துகளை கண்டுபிடித்தது. ஆனால் இந்த நூற்றாண்டில் நோய்களை விட மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளே அதிகமாக உள்ளது. தற்போதைய சிறார்களிடம் இந்த மன அழுத்த காரணிகள் அதிகம் இருப்பதை அன்றாட செய்திகளில் காணமுடிகிறது.


இந்த மனசோர்வு மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கவும், மனநலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்லவும் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி மனநல ஆரோக்கிய நாள் சிறப்பிக்கப்படுகிறது. முதன்முறையாக 1992ல் உலக மனநல ஆரோக்கிய அமைப்பு இந்த நாளை அறிமுகப்படுத்தியது.

மக்களின் மனநல பிரச்சினைகளை சரிசெய்ய இலவசமாக அரசு மற்றும் தன்னார்வல அமைப்புகள் அலைபேசி சேவைகளையும் அளித்து வருகின்றன. இந்த நூற்றாண்டில் மக்களிடையே பெரும் நோயாக பரவியுள்ள மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்நாளில் உறுதியேற்போம்.

Edited By: Prasanth.K