புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 30 ஜூலை 2025 (09:29 IST)

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

earthquake map

ரஷ்ய பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் விளைவாக பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் தொடங்கி அலாஸ்கா வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ரஷ்யாவின் பசிபிக் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கம்சத்கா தீபகற்ப பகுதியில் 8.7 ரிக்டர் என்ற அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு அருகே உள்ள ஜப்பான் தீவு நாட்டின் சில பகுதிகள் வரை உணரப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் மேல் எழுந்து ஊருக்குள் புகுந்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் 3.3 அடி உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

earthquake map

தென்கொரியா, வடகொரியா, தைவான் நாடுகளில் ஒரு அடிக்கும் மேல் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவுகள், அலாஸ்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பசுபிக் கடலை ஒட்டிய கரையோர பகுதிகள், தீவு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் மற்றும் கடல் அலைகளின் ஆர்பரிப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011ல் ஜப்பானின் புக்குஷிமாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பிறகு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது உள்ளதாக கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலாடேவ் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K