1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:37 IST)

தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை... மேலும் இருவருக்கு 6 மாதம் சிறை.! 20-பேர் விடுதலை..!!

fisherman boat
ராமேஸ்வரம் மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், இருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும்,  படகுகளை சிறை பிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
 
கடந்த நான்காம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
 
இந்நிலையில் கைதான மீனவர்கள் இன்று இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன்,  ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, நிபந்தனைகளுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
 
ஏற்கனவே ஒரு முறை கைதாகி விடுதலை செய்யப்பட்ட, மீனவர் லெனின் மீண்டும் கைதானதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.