மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!
மலேசியாவைச் சேர்ந்த தமிழருக்கு இன்று சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த தமிழர் பன்னீர்செல்வம் என்பவர், போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை இன்று நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தண்டனையை நிறுத்த வேண்டும் என்றும், பன்னீர் செல்வத்திற்கே தெரியாமல் கடத்தல் நடைபெற்றதாகவும், உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையை எதிர்த்து மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பன்னீர் செல்வம் நேரடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர்செல்வத்தின் தண்டனையை நிறுத்தி வைக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Siva