1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 மே 2024 (11:18 IST)

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்! ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை! – கொலம்பியா எடுத்த துணிச்சல் முடிவு!

Colombia President
காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் உடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக கொலம்பியா நாடு அறிவித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஆண்டு முதலாகவே போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் ராணுவம் காசாவை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உயிர் தப்பித்த பலரும் காசாவுக்கு அருகே எகிப்து எல்லையை ஒட்டியுள்ள ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ரபாவையும் தாக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இஸ்ரேலின் இந்த செயலை கொலம்பியா ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறது. முன்னதாக கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரொ இஸ்ரேல் அரசை நாஜிக்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேலிலிருந்து கொலம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தளவாட ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது. அதுமுதலே இரு நாடுகளுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று சர்வதேச தொழிலாளர்கள் தினத்தில் பேசிய கொலம்பிய அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாகவும், இஸ்ரேலின் இந்த செயல்களை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் சும்மா இருக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான போர் ஹமாஸுடன் முடியாமல் தற்போது ஹிஜ்புல்லா, ஈரான் என தொடர்ந்து வருவதால் மத்திய தரைக்கடல் பிராந்தியம் அமைதியற்ற நிலையை எட்டி வருவதாக உலக நாடுகள் பல வருத்தம் தெரிவித்துள்ளன.

Edit by Prasanth.K