1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 மே 2024 (12:16 IST)

புற்றுநோயால் சாகக்கிடந்த நபர்.. லாட்டரியில் அடித்த 10 ஆயிரம் கோடி! – அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய லக்கிமேன்!

Cancer patient won lottery
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு லாட்டரியில் 1.3 பில்லியன் பரிசு விழுந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



செல்வசெழிப்புடன் அமோகமாக வாழ வேண்டும் என்ற ஆசை பலருக்குமே இருக்கும். ஆனால் அதற்கு தேவையான பணத்தை சேர்ப்பதற்குள் பலரது வாழ்க்கையே முடிந்துவிடும். ஆனால் சிலருக்கு மட்டும் அப்படியான ராஜபோக வாழ்க்கை வாழ அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அப்படியான ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.
லாவோஸ் நாட்டை சேர்ந்த செங்சைபன் என்ற 46 வயதான நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒரேகானில் தற்போது வசித்து வரும் செங்சைபன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை கடந்த 8 ஆண்டுகளாக எடுத்து வந்தாலும், வாழ்வின் இறுதிக்கட்டங்களை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்படியிருக்கையில் சமீபத்தில் ஒரேகான் பகுதியில் பவர்பால் லாட்டரியில் ஒரு 100 டாலருக்கு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் செங்சைபன். உடலில் கேன்சரை கொடுத்த வாழ்க்கை லாட்டரியில் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது. செங்சைபன் வாங்கிய லாட்டரிக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.3 பில்லியன் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இந்த தொகை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலானது.

செங்சைபனின் வாழ்க்கை முடிய இருந்த இடத்தில் அதிர்ஷ்டம் அவருக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த பணத்தில் தனக்கென்று நல்லவீடு கட்டிக் கொள்வதுடன், ஒரு பிரத்யேக மருத்துவரையும் நியமித்து தனது புற்றுநோயிலிருந்து விரைவில் குணமடைய முடியும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் செங்சைபன்.

Edit by Prasanth.K