வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக இருந்தது. இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தைக் கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீம்ஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை நேற்று அறிவித்தது.
அதையடுத்து வழக்கு விசாரணை இன்று காலை முதல் நடந்த நிலையில் “நீதிமன்றத்தில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் 48 மணி நேரத்துக்குள் படம் சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும்” என நீதிமன்றம் ஆணையிட்டது. பின்னர் நடந்த அடுத்த கட்ட விசாரணையில் தற்போது படத்தை வெளியிட தடை இல்லை என அறிவித்துள்ளது. அதனால் இன்று மாலை 6 மணிக்காட்சிகளில் இருந்து படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.