1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (12:08 IST)

என் பெயரில் போலி செய்திகள் வெளியிடுகின்றனர் – முன்னணி இயக்குனர் கோபம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான தங்கர் பச்சான் தனது பெயரில் வெளியாகும் போலிச் செய்திகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான், சினிமா தவிர்த்து அரசியல் ரீதியாகவும் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவார். இந்நிலையில் சாத்தான்குளம் படுகொலை குறித்து அவர் பெயரில் இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியை தான் வெளியிடவில்லை என்றும் அதை வெளியிட்டவர்கள் தண்டனைக்குள்ளானவர்கள் என்றும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவ படங்களை பயன்படுத்தியும், என் பெயரை பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட " சாத்தான் குளம் இரட்டைக் கொலை" குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார். இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன்.

நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் வாட்ஸ்அப் எனது ட்விட்டர், ஃபேஸ்புக் இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். இவைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை.

இனி என்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.