1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூன் 2020 (15:49 IST)

கிரிக்கெட் வீரர்களையும், திரையுலகையும் அதிர வைத்த மரணம்! – வெளியாகாத சுஷாந்த்தின் கடைசி படம்!

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராத்புத் 2013ல் வெளியான “கை போ சே” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் பெரும் நடிகராக அவரை முதன்முதலாக அடையாளம் காட்டியது “தோனியின் வாழ்க்கை வரலாறு” படம்தான். அதற்கு பிறகு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் “தோனியின் வாழ்க்கையை சுஷாந்த் சிங் தவிர யாருமே நடிக்க முடியாது” என உறுதியாக சொல்லுமளவிற்கு பிரபலமான நடிகர் ஆனார்.

அதை தொடர்ந்து அவர் நடித்த கேதர்நாத், சிச்சோரே போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் சுஷாந்த் சிங் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடைசியாக ”தில் பச்சாரா” என்ற படத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். கொரோனா முடக்கம் ஏற்பட்டிருக்காவிட்டால் இந்த படம் மே மாதத்தில் வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரை துறையை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.