வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (11:38 IST)

சீரியல் கில்லர் ”ஜாலி” கதை திரைப்படமாகிறது..

கேரளாவையே அலறவைத்த சீரியல் கில்லர் ஜாலியின் கதை தற்போது திரைப்படமாக உருவெடுக்க உள்ளது.

கேரளா மாநிலம், கூடத்தாயி கிராமத்தை சேர்ந்த ஜாலி என்ற பெண், ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மண வாழ்க்கை மிகவும் கசப்பாக சென்றுள்ளது. இதனிடையே ஜாலி, தனது மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர். தனது கணவரின் குடும்பத்தினர் இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பர் என நினைத்த ஜாலி, அனைவரும் தீர்த்துகட்ட முடிவெடுத்தார்.

ஜாலியின் கணவர் ராய் தாமஸின் குடும்பத்தில் உள்ளவர்கள், இரவு உணவிற்கு பிறகு, மட்டன் சூப் சாப்பிடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி சூப்பில் சையனைடு கலந்து அனைவரையும் கொலை செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அனைவரையும் உடனடியாக கொலை செய்யவில்லை. தன் மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது காலம் இடைவெளி விட்டுவிட்டு தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

அதன் படி, 2002 ஆம் ஆண்டு, தனது மாமியார் அன்னமாவுக்கு மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து கொன்றுள்ளார். பின்பு 2008 ஆம் ஆண்டு மாமனார் தாமஸ், 2011 ஆண்டு கணவர் ராய் தாமஸ் ஆகியோரையும் அதே போல் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றுள்ளார். இது போல் தான் திட்டமிட்டபடி கொலைகள் செய்துகொண்டிருந்தபோது அன்னமாவின் சகோதரர் மேத்யூ, ஜாலியின் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனை அறிந்த ஜாலி, 2014 ஆம் ஆண்டு மேத்யூவையும் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றுள்ளார்.

இதோடு நின்றுவிடவில்லை அவர். 2016 ஆம் ஆண்டு, தனது காதலரான சாஜூவின் மனைவி சிலியையும் அவரது 10 மாத பெண் குழந்தையையும் மட்டன் சூப்பில் விஷம் கலந்து கொன்றுள்ளார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு சாஜுவும் ஜாலியும் திருமணம் செய்துகொண்டனர்.

இதனையடுத்து வெளிநாட்டில் வசித்து வரும் ராய் தாமஸின் சகோதரர், தனது குரும்பத்தினர் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் புகார் அளித்தார். அதன் பின்பு, சாஜூவின் மனைவி சிலியின் உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீஸார் உயிரிழந்த உடல்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை மூலம், அனைவரும் சையனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஜாலியையும் சாஜூவையும் விசாரித்த போது, ஜாலி உண்மையை ஒப்புக்கொண்டார்.

இந்த கொலை சம்பவம் கேரளாவையே அலறவைத்தது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் திரைப்படமாக உருவெடுக்கவுள்ளது. ஏற்கனவே இந்த கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மலையாளத்தில் திருஷ்யம், மெமரீஸ், ஆகிய திரைப்படத்தை இயக்கிய, ஜீது ஜோசப் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சி செய்து வந்தார்.

இதனையடுத்து இந்த கொலை குறித்தான உண்மை தற்போது தெரியவந்துள்ள நிலையில், இயக்குனர் ரோனெக்ஸ் பிலிப் என்பவர் இந்த கொலை சம்பவத்தை திரைப்படமாக இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ”கொலபாத கண்களூடே ஒன்னர பத்திதண்டு” என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டரையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஜாலியின் கதாப்பாத்திரத்தில் டினி டேனியல் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக ஜீது ஜோசப் இயக்கவிருந்த திரைப்படத்தில், மோகன்லால் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.