வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (14:46 IST)

செய்வதை துணிந்து " செய் " திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருபவர் தான் நகுல், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் ஆக்ஷன் படம் "செய்" இன்று வெளியாகியுள்ளது. 
 




இயக்குனர்: ராஜ் பாபு
நடிகை :ஆஞ்சல் முஞ்சல் 
ஒளிப்பதிவாளர்: விஜய் உலகநாதன் 
எடிட்டர்: கோபிகிருஷ்ணா 
 
திரைப்பட கதை :
 
செய் படத்தின் துவக்கத்தில் மனநலக் காப்பகம் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகிறது. இதற்கு காரணம் அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய் தான் என எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சியும் குற்றஞ்சாட்டுகிறது. இதனால் பதவியை துறக்கிறார் தலைவாசல் விஜய். தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் அவரை மர்ம கும்பல் கொல்கிறது. 
 
இதற்கிடையே, பொறுப்பில்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றி திரியும் நகுலுக்கு சினிமா ஸ்டாராக வேண்டும் என்பது ஆசை. இவரை தனது கதைக்காக பின் தொடர்கிறார் பெண் இயக்குனர் ஆஞ்சல். ஒரு கட்டத்தில் ஆஞ்சல் மேல் நகுலுக்கு காதல் மலர, அவரது சொல்படி வேலைக்கு செல்கிறார். ஆனால் அந்த வேலையே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், அமைச்சரை கொன்ற அந்த மர்ம கும்பல் யார் என்பதற்கான விடையே படத்தின் கதை. 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு நகுல் நடித்திருக்கம் படம். ஓப்பனிங் சாங், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என தனது வழக்கமான கமர்சியல் பாணியில் பயணித்திருக்கிறார். ஓப்பனிங் பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மெனக்கெட்டிருக்கிறார். 
 
புதுமுக நாயகி  ஆஞ்சலுக்கு இந்த படத்தில் பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான அஞ்சலி ராவ்வும் தனது கடமையை சரியாக செய்திருக்கிறார். 
 
அவர்களை தவிர, பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், அஸ்கர் அலி, சந்திரிகா ரவி என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 
 
மனித உறுப்புகள் திருட்டை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய படங்கள் வந்துவிட்ட நிலையில், அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை மூலம் செய் திரைப்படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்பாபு. படத்தின் ஆரம்ப காட்சிகள் பார்வையாளர்களை படத்துக்குள் ஈர்க்கின்றன. குறிப்பாக இடைவேளை பிளாக் சுவாரஸ்யத்தை தூண்டுகிறது. 
 
ஆனால் நகுலின் அறிமுகத்துக்கு பின்னான காட்சிகள் படுகமர்சியலாக அமைந்திருப்பதால் கதையின் ஓட்டத்தில் இருந்து திசை மாறிவிடுகின்றது. சம்மந்தமில்லாத காட்சிகளை அமைத்து, அதை ஒன்றுக்கொன்று முடிச்சுபோட முயன்றிருக்கிறார் இயக்குனர். அது ஓரளவுக்கு ஒர்கவுட் ஆகியிருக்கிறது. 
 
கொஞ்சம் விறுவிறுப்பு கூடும் போது, ஸ்பீடு பிரேக்கர் போல் வரும் பாடல் காட்சிகள் அயர்வை ஏற்படுத்துகின்றன. அதேபோல சிம்பிளாக செய்து முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு நீட்டி இழுத்து முடித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 
 
வில்லனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள், யார் இவர் என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஆனால் இவர் தான் அவர் என சொன்ன பிறகு, சப்பென்று ஆகிவிடுகிறது. அதபோல், க்ளைமாக்சில் வில்லனுக்கு ஏன் இத்தனை பெரிய வசனம் என்பதும் புரியவில்லை. 
 
பாடல்களிலும், பின்னணி இசையிலும் புதுவிதமான முயற்சிகளை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ். ஆனால் இந்த வெஸ்டர்ன் இசை செய்க்கு பொருந்தவில்லை. பின்னணி இசையும் காதை பதம் பார்க்கிறது. 
 
படத்துக்கு தேவையானதை மட்டும் அழகாக தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத். அதுவும் அந்த காட்டுப்பகுதி காட்சிகளும், இடைவேளை பிளாக் சண்டைக்காட்சியும் செம சினிமாட்டோகிராபி. எடிட்டர் கோபிகிருஷ்ணா படத்தை இன்னும் கிரஸ்பாக கத்தரித்திருக்கலாம். 
 
படத்தின் கரு:
 
"நீ செய்வது நல்ல காரியமாக இருந்தால் அதை துணிந்து செய்து முடி " என்கிறது 'செய்'. இதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையில் சொல்லியிருந்தால், இந்த 'செய்' இன்னும் நன்றாக வசூல் செய்திருக்கும்.