1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (12:45 IST)

எதுவும் உறுதி கிடையாது… விஷால் படத்தில் நடிப்பது குறித்து பிரியா பவானி சங்கர்!

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய தேதியில் கொரோனா பிரச்சனைகளை எல்லாம் தாண்டி இரட்டை இலக்க எண்ணிக்கையில் படத்தைக் கைவசம் வைத்துள்ள நடிகையாக அவர் இருக்கிறார். இந்நிலையில் இப்போது புதிதாக விஷால் நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகி என சொல்லப்பட்டது. எனவே சமூகவலைதளங்களில் இந்த செய்தி உண்மையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ‘எதையும் முடிவெடுக்கும் நிலையில் நான் இல்லை. சகஜ நிலை திரும்பி எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது அந்தப் படத்தில் இருந்தால் நடிகையாகவோ அப்படி இல்லை என்றால் ஒரு ரசிகையாகவோ ரசிப்பேன்.என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நிச்சயமில்லை. தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.