1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (12:57 IST)

மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி- கமல்ஹாசன்

சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா  காலமானார், அவருக்கு வயது 102 ஆகும்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பொலோ தனியார் மருத்துவமனையில் சங்கரய்யா கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் நபர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் வலைதள பக்கத்தில்,

‘’மாபெரும் தோழர் மறைந்தார்.

நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார்.

சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின்  நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.

பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி’’ என்று தெரிவித்துள்ளார்.