வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (13:47 IST)

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் பகிரங்க மன்னிப்பு – வீடியோ வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்த விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்தது என்பதும், அதன்பின்னர் அவர் ‘நன்றி வணக்கம்’ என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 800 பட விவகாரத்தின்போது ஒருசில நெட்டிசன்கள் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்தனர். இதற்கு கடுமையான கண்டனங்களை கனிமொழி எம்பி உள்பட பலர் தெரிவித்தனர்.

இதையடுத்து விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. போலிஸ் விசாரணையில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பதாக அவரது ஐபி முகவரியைக் கொண்டு கண்டுபிடித்துள்ளது சைபர் கிரைம் போலீஸ். மேலும் இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரைக் கைது செய்வும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐபிசி தமிழ் இணையதள சேனல் சம்மந்தப்பட்ட நபரை சந்தித்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் சம்மந்தப்பட்ட நபர் தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அதற்காக விஜய்சேதுபதி, அவரின் மகள், மனைவி மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் தோன்றிய அவரின் தாயாரும், தன் மகன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.