வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 மே 2020 (08:40 IST)

பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள்! பின்னணி என்ன?

கொரோனாவில் இருந்து மீண்ட கனிகா கபூர் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்த நிலையில் அதை மருத்துவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை மதிக்காமல்  லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.

கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக மருத்துவமனையின் இயக்குனரே செய்தியாளர்களை சந்தித்து பேசியது பரபரப்புகளைக் கிளப்பியது. கனிகா கபூருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் அவர் குணமாகி வீடு திரும்பினார்.

இதையடுத்து தற்போது கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த பிளாஸ்மா தானத்தைத் தர முன்வந்துள்ளார். ஆனால் அவரது தானத்தை மருத்துவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.  பிளாஸ்மா தானம் செய்பவருக்கு இருக்க வேண்டிய உடற்தகுதிகளாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியான நிலையிலும், உடல் எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். மேலும் இதய நோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட மருத்துவப் பிரச்சினைகளும் சம்மந்தப்பட்டவருக்கு இருக்கக் கூடாது. ஆனால் கனிகா கபூரின் குடும்ப மருத்துவ வரலாற்றில் பிரச்சனைகள் இருப்பதால் மருத்துவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.