வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (09:59 IST)

லண்டன் சென்ற கார்த்திக் சுப்புராஜ் & கோ - தனுஷ் தாமதம் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்காக படக்குழு லண்டன் சென்றுள்ளது.

இறைவிப் படம்  முடிந்து சில சர்ச்சைகள் வேகமாகப் பரவி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்ட் போடப்பட இருப்பதாக தகவல்கள் உலாவந்து கொண்டிருந்தது. அப்போது கார்த்திக் சுப்பராஜை அழைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அதன் பின்னர் தனுஷ் நடித்துக்கொண்டிருந்த வரிசையானப் படங்களால் அந்தப் படம் சாத்தியமாகாமல் போனது. அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜும் மெர்குரி மற்றும் பேட்ட ஆகியப் படங்களை இயக்கி முடித்துவிட்டார்.

இந்நிலையில் பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்தப் படமாக தனுஷ் படம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப்படம் பற்றி எந்தவொரு செய்தியும் வெளியாகாமல் இருக்கவே படம் கைவிடப்பட்டதாக பேச்சு எழுந்தது. மேலும் தனுஷும் வரிசையாகப் படங்களை ஒப்புக்கொண்டு வந்ததும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் படத்தின் முக்கியமான ஒருக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அல்பசீனோவை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முயற்சி செய்து வருவதால்தான் தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் உள்ளிட்ட படக்குழு லண்டனுக்கு சென்றுள்ளனர். ஒரேக் கட்டமாக 45 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வரும் தனுஷ் மட்டும் இன்னும் சில நாட்களில் லண்டன் செல்ல இருக்கிறார்.