1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:41 IST)

இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவேன்… இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பகிர்ந்த புகைப்படம்!

நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய  கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படம் எந்தவித ப்ரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பின. விமர்சனங்களைக் கடந்து செல்லாமல் அதற்கு பதிலளிக்கிறேன் என சமூகவலைதளங்களில் அல்போன்ஸ் பதிவிட்ட கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின.

இந்நிலையில் இப்போது அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை தமிழில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு காதல் படம் என்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அல்போன்ஸ் புத்ரன் “நான் இப்போது இயக்கவுள்ள படத்துக்குப் பிறகு அடுத்த படத்தில் இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுவதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.