நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு
பிரபல மலையாள நடிகர் திலீப், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகை பாலியல் வழக்கில், சுமார் எட்டு ஆண்டுகால விசாரணைக்கு பிறகு எர்ணாகுளம் நீதிமன்றத்தால் இன்று (டிசம்பர் 8) விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் தாம் சிறை செல்ல நேர்ந்ததற்கு பின்னணியில், தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். "இந்த வழக்கில் குற்றச்சதி செயல் தீட்டப்பட்டிருப்பதாக முதன்முதலில் கருத்து தெரிவித்தது மஞ்சு வாரியர்தான். அதன்பிறகே, எனக்கு எதிரான சதி ஆரம்பமானது" என்று திலீப் கூறினார்.
மேலும், காவல்துறை முதன்மை குற்றவாளியுடன் இணைந்து தனக்கு எதிராக போலியான கதைகளை பரப்பியதாகவும், உண்மை சதித் திட்டம் நடிகைக்கு எதிராக அல்ல, தமக்கு எதிராகவே தீட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒன்பது ஆண்டுகளில் தனது பிம்பம் சீரழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். நீதிமன்றம் ஏ1 முதல் ஏ6 வரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நிலையில், திலீப் மீது ஆதாரங்கள் இல்லை என கூறி விடுதலை அளித்துள்ளது.
Edited by Mahendran