1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஆகஸ்ட் 2016 (06:46 IST)

இலங்கை மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை

இலங்கையில் மலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த தீர்ப்பை வழங்கினார்.
 
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் உடன் பிறந்த சகோதரர்கள். ஏனைய மூன்று பேரும் இரு சகோதரர்களின் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
2000 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் திகதி ராகலை பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம் பெற்ற கொலை வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தோட்டத் தொழிலாளி ஒருவரை தாக்கி கொலை செய்தமை தொடர்பாக காவல் துறையால் இவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
 
வழக்கு விசாரணையின் பின்னர், எதிரிகளை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தலா ரூபாய் 3 ஆயிரம் அபாராதத்துடன் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.