வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. கட்டுரைகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2015 (15:13 IST)

தோனியிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது இதைத்தானே!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து, 3 போட்டிகளுக்குப் பின் முதல் வெற்றியைக் கணியை பறித்துள்ளது இந்திய அணி.

 
அதுவும் சாதாரணமாக வந்துவிடவில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ளது. அதிலும், குறிப்பாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டன் மகேந்திரசிங் தோனியின் செயல்பாடு சிறப்பானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று புதன்கிழமை இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா [3], ஷிகர் தவான் [23], விராட் கோலி [12] ரஹானே [52], ரெய்னா [5] எடுத்து வெளியேறினர்
 
அப்போது களம் புகுந்திருந்த தோனி முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மறுமுனையில் அக்ஷர் பட்டேல் [13], புவனேஷ்குமார் [13] ரன்கள் எடுத்து வெளியேறி அணியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். 
 
ஒருகட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனால், இந்திய அணி 200 தாண்டுவதே சிரமம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன் பிறகு ஹர்பஜன் சிங், தோனியுடன் கைகோர்த்தார்.
 
இந்த ஜோடி அடித்து விளையாடியது. இதனால், அணியின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. தோனி 57 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். ஹர்பஜன் சிங் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
இந்த இணை 56 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேறினார். ஆனால், கடைசிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்த தோனி 86 பந்துகளில் [7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 92 ரன்கள் குவித்தார்.
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கே உரிய சில ’ஹெலிகாப்டர்’ ஷாட்கள் சிலவற்றை அடித்தார். விக்கெட் தொடர்ச்சியாக விழுந்தபொழுதும், நிதனமாகவும், பொறுப்புடனும் அடித்து விளையாடினார். தோனியை முதலிலேயே தென் ஆப்பிரிக்க வீரர்கள் வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.
 
ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடிவிட்டுச் சென்றார். ரசிகர்கள் இதைத்தானே எதிர்பார்த்தார்கள் தோனி! இதனை, தொடர்ந்து தோனி தக்கவைத்துக்கொண்டு அடுத்தடுத்தப் போட்டிகளில் இன்னும் சாதிப்பாரா? என்பது ரசிகர்களிடம் இருக்கும் அடுத்த கேள்வி.

வரும் 18ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவிருக்கும் போட்டியில் தெரிந்துவிடும்.