செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:28 IST)

தெறிக்க விட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தில் இந்தியா!

பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரலாறு காணாத அளவு பதக்கங்களை பெற்று தகுதி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது இந்தியா.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஆகஸ்டு 27ம் தேதி தொடங்கியது. இதில் இளவெனில் வாலறிவன், அஸ்வினி சிங், அபிஷேக் வர்மா உள்ளிட்ட இந்தியாவின் 109 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றிபெறுவோர் 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பதால் இந்தியாவில் பலராலும் இந்த போட்டி ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்டது.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 251.7 புள்ளிகளோடு தங்க பதக்கம் வெண்ரு இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார் தமிழகத்தை சேர்ந்த இளவெனில் வாலறிவன். அதை தொடர்ந்து வெவ்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் விபரங்கள்:

 
இளவெனில் வாலறிவன் (தங்கம்) – 10 மீட்டர் ஏர் ரைபிள்
அபிஷேக் வர்மா (தங்கம்) – 10 மீட்டர் ஏர் பிஸ்டல்
யாஷ் அஸ்வினி சிங் (தங்கம்) – 10 மீட்டர் ஏர் பிஸ்டல்
அபூர்வி சண்டிலா, தீபக் குமார் (தங்கம்) – 10 மீட்டர் ஏர் ரைபிள் (இரட்டையர் பிரிவு)
அஞ்சும் மவுட்கில், திவியான்ஸ் சிங் (வெண்கலம்) – 10 மீட்டர் ஏர் ரைபிள் (இரட்டையர் பிரிவு)
மனு பெக்கர், சய்ரஃப் சௌத்ரி (தங்கம்) – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (இரட்டையர் பிரிவு)
யாஷ் அஸ்வினி, அபிஷேக் வர்மா (வெள்ளி) – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (இரட்டையர் பிரிவு)

இப்படியாக உலக நாடுகள் எவற்றாலும் சாதிக்க முடியா வண்ணம் மொத்தமாக 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை அள்ளி வந்திருக்கின்றனர் இந்திய வீர, வீராங்கனைகள்.
இதன்மூலம் அபிஷேக் வர்மா, யாஷ் அஸ்வினி, மனு பெக்கர், சய்ரஃப் சௌத்ரி, அஞ்சும் மவுட்கில், அபூர்வி சாண்டிலா, சஞ்சீவ் ராஜ்புத், திவ்யான்ஸ் சிங் மற்றும் ரஹி சர்னோபத் ஆகியோர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நெடுநாளைய வரலாற்றில் உலக துப்பாக்கி சுடுதல் தர வரிசையில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வெற்றி ஒலிம்பிக்கிலும் பிரதிபலித்தால் ஒலிம்பிக் வரலாற்றிலும் இந்தியா மிகப்பெரும் சாதனையை உருவாக்கும்.