1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (09:54 IST)

கடைசி நேரத்தில் வெளுத்துவிட்ட ரொனால்டோ! – அதிக கோல் அடித்து புதிய சாதனை!

நேற்றைய ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஹ்ங்கேரியை எதிர்கொண்ட போர்ச்சுக்கல் வெற்றி பெற்ற நிலையில் ரொனால்டோ புதிய சாதனையும் படைத்தார்.

ஈரோ 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகின்றன. அதில் க்ரூப் எஃப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதல் மேட்ச்டேவில் ஹங்கேரி – போர்ச்சுக்கல் அணிகள் மோதின. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக பிரபல கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை வழிநடத்தினார்.

முதல்பாதியில் இரு அணிகளுக்கும் இடையே கோல் போட போராட்டமே நடந்தது. தொடர்ந்து கோல் போட போர்ச்சுக்கல் வியூகம் வகுத்தாலும் ஹங்கேரி அதை தவிடுபொடியாக்கி கொண்டிருந்தது. சொந்த மண்ணில் வெல்ல வேண்டும் என ஹங்கேரி தீவிரம் காட்டியது. முதல் பாதியில் ஒரு கோல் கூட இரு அணிகளும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் போர்ச்சுக்கல் முன்னேற்றம் காட்டியது.

இரண்டாவது பாதியில் 84வது நிமிடத்தில் ரபேல் குவரேரோ முதல் கோலை அடித்து போர்ச்சுக்கலுக்கு வெற்றி வாய்ப்பை கூட்டினார். தொடர்ந்து உற்சாகமாக போர்ச்சுக்கல் விளையாட அடுத்து 87வது நிமிடத்தில் அடுத்த கோலை ரொனால்டோ அடித்தார். அதை தொடர்ந்து அளிக்கப்பட்ட கூடுதல் 5 நிமிடத்தில் மீண்டும் ரொனால்டோ ஒரு கோலை அடித்தார். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் அடித்த இரண்டு கோல்களுடன் மொத்தம் ஈரோ கோப்பைக்காக 11 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.