ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (10:41 IST)

EURO 2020 - இத்தாலி வெற்றி கொண்டாத்தில் மரணம்!

யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி வென்றதை தொடர்ந்து நடந்த கொண்டாட்டத்தில் மரணமும் தாக்குதலும் காயங்களும் ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருந்த யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆவேசமாக ஆடினார்கள். 
 
இதனையடுத்து ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு இருந்ததை அடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய பெனால்டி ஷாட் முறை அமல்படுத்தப்பட்டது. 
 
இதில் இத்தாலி 3 கோல்கள் போட்டது. ஆனால் இங்கிலாந்து இரண்டு கோல்கள் மட்டுமே போட்டதால் இத்தாலி அணி யூரோ கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்றும் அரை நூற்றாண்டுக்கு பின்னர் அந்த அணி மீண்டும் யூரோ கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் வெற்றி கொண்டாட்டம் கலைக்கட்டியது. இத்தாலியின் பொருளாதார தலைநகரான மிலனில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் 15 பேர் காயமடைந்தனர், மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். பட்டாசு வெடித்ததில் ஒருவர் மூன்று விரல்களை இழந்தார்.
 
அதேபோல இத்தாலியின் தெற்கு நகரமான ஃபோகியாவுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில், ஒரு மர்ம நபர் வாகனத்தில் வந்த ஒருவரை தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. இதில் தாக்கப்பட்ட நபருடன் வந்த ஆறு வயது சிறுமியும் காயமடைந்துள்ளார். 
 
மேலும், வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிசிலியில் உள்ள கால்டகிரோனுக்கு சென்றுகொண்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளது.