வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:06 IST)

நண்பா என் டீமில் வந்து சேந்துடு..! – மெஸ்சிக்கு அழைப்பு விடுக்கும் நெய்மார்!

அடுத்த ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்சி விலகப்போவதாக கூறப்படும் நிலையில் தனது பிஎஸ்ஜி அணியில் விளையாட நெய்மார் அழைப்பு விடுத்துள்ளார்.

நீண்ட நாள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ப்ரீமியர் லீக், லா லிகா, லே கோபா உள்ளிட்ட கால்பந்து ஆட்டங்கள் விமரிசையாக தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பிஎஸ்ஜி அணி உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடடை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜிக்காக நெய்மார் போட்ட 2 கோல்களை சேர்த்து 3 – 1 என்ற புள்ளியில் மான்செஸ்டரை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் முடிவில் பத்திரிக்கை சந்திப்பில் பேசிய நெய்மாரிடம் மெஸ்சி பார்சிலோனா அணியிலிருந்து விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய நெய்மார் “மெஸ்ஸி எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் இணைந்து சில காலங்கள் பார்சிலோனாவுக்காக விளையாடியுள்ளோம். அவர் பிஎஸ்ஜியில் இணைவதாக இருந்தால் எனது இடத்தை அவருக்கு தருவேன்” என கூறியுள்ளார்.

சமீப காலமாக பார்சிலோனா நிர்வாகிகளுக்கும், மெஸ்ஸிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த ஆண்டு லா லிகா போட்டிகளுக்கு பிறகு அவர் பார்சிலோனா அணியிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே பார்சிலோனா அணியி மீது பிரியம் கொண்ட மெஸ்ஸி 14 ஆண்டுகளாக பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார்.