வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 பிப்ரவரி 2019 (14:16 IST)

இந்தியாவுக்கு 220 ரன்கள் இலக்கு – அடித்து நொறுக்கிய நியுசிலாந்து..

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்று தொடங்கிய முதல் டி 20 போட்டியில் நியுசிலாந்து அபாரமாக விளையாடி 219 ரன்களைக் குவித்துள்ளது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.

நியுசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய நியுசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான செய்ஃபர்ட் மற்றும் காலின் மன்ரோ இருவரும் இந்திய பந்துவீச்சை ஒருக் கைப் பார்த்தனர். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ரன்களை இந்த ஜோடி சேர்க்க ரன் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய மன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து குருனால் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 43 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து அவுட்  ஆனார்.

இதையடுத்து டேரில் மிட்செல்லை தினேஷ் கார்த்தி பவுண்டரிக்கு அருகில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தே கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடிவந்த 21 பந்துகளில் 34 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்களில் ராஸ் டெய்லர் 23 ரன்களும். குக்குலின் 20 ரன்களும் சேர்த்து கடைசி நேர அதிரடிக் காட்ட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை சேர்த்தது.

இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும் புவனேஷ்வர் குமார் கலீல் அஹமது, , குருனால் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை ரோஹித் தலைமையிலான இந்திய அணி துரத்திப்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.