வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (08:11 IST)

தடை செய்யப்பட்ட இங்கிலாந்து வீரருக்காக வருந்தும் அஸ்வின்!

இங்கிலாந்து வீரர் ஆய்லி ராபின்சன் நிறவெறி மற்றும் ஆணாதிக்க கருத்துகளை தெரிவித்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆலி ராபின்சன். ஆல்ரவுண்டரான இவர் 7 விக்கெட்களையும் 42 ரன்களையும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்து பிரபலமானார். அதே சமயம், அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நிறவெறி மற்றும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்திருந்தவையும் பகிரப்பட்டு அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து இப்போது அவரை தற்காலிகமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த பதிவுகளை பகிரும் போது அவர் தனது பதின்பருவத்தில் விவரம் அறியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டுள்ளார். ராபின்சனின் இந்த தடை பல்வேறு விதமான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் அதுசம்மந்தமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது டிவீட்டில் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செய்த தவறுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது. நான் அவருக்காக வருத்தப்படுகிறேன். அறிமுக வீரராக முதல் டெஸ்ட்டிலேயே சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரின் இந்த தடை எதிர்காலம் என்பது சமூகவலைதளங்களில் உள்ளது என்பதைக் காட்டியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.