ரசிகர்களை திருப்திப்படுத்துமா நட்சத்திர கிரிக்கெட்...?
2 கோடி கடனில் இருக்கும் நடிகர் சங்கம், 26 கோடியில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த மெகா கட்டிடத்தில் அமையவுள்ள ப்ரிவியூ திரையரங்கை கட்டும் செலவை கார்த்தி, சூர்யாவும், திருமண மண்டபத்துக்கு ஆகும் செலவை ஐசரி கணேஷும் ஏற்றுள்ளனர். என்றாலும் இவை யானை பசிக்கு சோளப்பொரி மட்டுமே.
கட்டிடத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு சென்னையில் ஏப்ரல் 17 -ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர். இதில் வசூலாகும் பணத்தை கட்டிட நிதிக்கு பயன்படுத்திக் கொள்வதாக ஏற்பாடு.
தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் என பிற மொழி நடிகர்களையும் கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளனர். ரஜினி, கமலும்கூட சேப்பாக்கம் மைதானம் வரவிருக்கிறார்கள்.
மொத்தம் எட்டு அணிகள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இருப்பார்கள். எட்டு அணிகளும் 4 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் மொத்தமே 12 ஓவர்கள்தான். ஒரு அணிக்கு 6 ஓவர்கள், எதிரணிக்கு 6 ஓவர்கள்.
இந்த எட்டு அணிகளுக்கும் சென்னை, மதுரை, திருச்சி என்று தமிழக நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முன்னணி நாயகி விளம்பர தூதராக இருப்பார். நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா என்று அனைவரையும் தூதுவர்களாக்கியிருக்கிறார்கள்.
வெறும் 12 ஓவர்களைக் கொண்ட போட்டிகள் ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும், ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கவா வருகிறார்கள்? தங்களின் விருப்பத்துக்குரிய நடிகர், நடிகைகளை பார்க்க வருகிறார்கள். ஒரேயிடத்தில் பலமொழி நடிகர், நடிகைகளை பார்ப்பதே அவர்களை திருப்திப்படுத்திவிடும் என்று இன்னொருபுறம் சமாதானமும் செய்யப்படுகிறது.
ஏப்ரல் 17 சேப்பாக்கம் பக்கமாக வேலையிருந்தால் ஒருநாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளுங்கள். சேப்பாக்கம் ட்ராபிக் ஜாமில் பிழியப் போகிறது.