மலையாள சினிமாவை தெறிக்கவிட்ட விஜய்
மலையாள சினிமாவை தெறிக்கவிட்ட விஜய்
விஜய்யின் தெறி ஏப்ரல் 14 வெளியாகிறது. தெறியின் கேரள திரையரங்கு உரிமை 5.6 கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. இது, மலையாளத்தின் முன்னணி நடிகர்களின் பல படங்களின் பட்ஜெட்களைவிட அதிகம்.
ஃப்ரைடே ஃபிலிம்ஸ் இந்த உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் பெற்றுள்ளது.
கேரளாவில் விஜய் படங்கள், மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றன. தெறிக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். விஜய் படங்கள் வெளியாகும் போது, பிற மலையாளப் படங்களுக்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளைவிட அதிகம் ஒதுக்கப்படுகின்றன. இதனை மலையாள சினிமாவின் எக்சிபிட்டர்கள் சங்கம் பலமுறை எதிர்த்துள்ளது. மலையாளம் அல்லாத பிற மொழிப் படங்கள், அந்தந்த மாநிலங்களில் வெளியாகி ஒருவாரம் பத்து தினங்கள் கழிந்த பின்பே கேரளாவில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. எங்களுக்கு லாபம்வரும் படங்களை திரையிடுவோம், அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கறாரான முடிவு காரணமாக இத்தகைய முன்னெடுப்புகள் இன்றுவரை செல்லுபடியாகவில்லை.
முன்னணி மலையாள நடிகர்களின் படங்களுக்கே 80 முதல் 100 திரையரங்குகளே ஒதுக்கப்படும். விஜய் படங்களுக்கு சாதாரணமாக 100 -க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும். தெறிக்கும் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, ஏப்ரல் 14 விஷுவை முன்னிட்டு திரைக்கு வருவதாக இருந்த மம்முட்டி படம் உள்பட மூன்று படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓணத்தை அடுத்தபடி மலையாளிகளின் முக்கிய பண்டிகை விஷு. நமது பொங்கல் பண்டிகையைப் போல. அன்று அதிகமான படங்கள் திரைக்கு வரும். சென்ற வருட விஷுக்கு மம்முட்டி, நயன்தாரா நடித்த, பர்ஸ்கர் தி ராஸ்கல் வெளியானது. இந்த வருடம் தெறிக்கு வழிவிட்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை.
மம்முட்டியின் ஒயிட், ஜெயராமின் ஆடுபுலியாட்டம், குஞ்சாகா போபனின் வள்ளியும் தெற்றி புள்ளியும் தெற்றி என மூன்று படங்கள் இந்த விஷுவுக்கு வெளியாவதாக இருந்து, தெறியின் வருகை காரணமாக மூன்றும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவைப் பொறுத்தவரை விஜய்தான் சூப்பர் ஸ்டார். ரஜினி, அஜித்தெல்லாம் அவருக்கு அடுத்துதான்.
கொசுறு தகவல் - தெறி என்றால் மலையாளத்தில் கெட்டவார்த்தை என்று அர்த்தம்.