கடந்தவார படங்களின் வசூல்... தங்கலின் தாண்டவம்
தமிழ்ப் படங்கள் செய்யாத சில சாதனைகளை இந்திப் படமான தங்கல் தமிழ்நாட்டில் நிகழ்த்தியுள்ளது. முதல்வார ஓபனிங்கைவிட இரண்டாவது வார இறுதியில் இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.
கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியான படங்களில் மணல் கயிறு 2 சென்றவார இறுதியில் நாற்பதாயிரங்கள் மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. அதன் இதுவரையான சென்னை வசூல் 6.50 லட்சங்கள் மட்டுமே.
மற்றொரு கிறிஸ்மஸ் படமான பலே வெள்ளையத்தேவா கடந்த வார இறுதியில் 4.15 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 69.72 லட்சங்கள்.
சென்றவாரம் வெளியான அச்சமின்றி முதல் மூன்று தினங்களில் சென்னையில் 4.80 லட்சங்களை வசூலித்துள்ளது. இதற்கு மோ பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் சென்னையில் 5.95 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
வெங்கட்பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகம் இன்னும் வசூலிக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 10.20 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல், 4.05 கோடிகள்.
கடந்தவாரம் வெளியான துருவங்கள் 16 படத்துக்கு நல்ல வரவேற்பு. ஆனால் முதல் மூன்று தினங்களில் வெறும் 48 காட்சிகள் மட்டுமே சென்னையில் ஓட்டப்பட்டன. அதில் 14.50 லட்சங்களை வசூலித்துள்ளது. வரும் நாள்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் வசூலிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஆங்கிலப்படமான அசாசின்ஸ் க்ரீட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 20 லட்சங்களை வசூலித்துள்ளது.
கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த கத்தி சண்டை இந்த வாரம் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 35.60 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 1.93 கோடி.
கடந்தவாரம் 84.70 லட்சங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த தங்கல் இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் தங்கல் 1.11 கோடிகள் வசூலித்துள்ளது. இது முதல்வார ஓபனிங் வசூலைவிட சுமார் 26 லட்சங்கள் அதிகம். இப்படியொரு முன்னேற்றத்தை இரண்டாவது வாரத்தில் எந்தத் தமிழ்ப் படமும் பெற்றதில்லை. ஞாயிறுவரை தங்கலின் சென்னை வசூல் மட்டும் 2.90 கோடிகள்.
புதுவருடத்திலும் தமிழ்ப் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆங்கில, இந்திப் படங்கள் ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. தமிழ் சினிமா தன்னை புதுப்பித்துக் கொள்ளாதவரை இது மாறப்போவதில்லை.